Monday, August 16, 2010

ஒரு மம்மட்டி மண்ணெடுத்து... (கொங்கு மண்டலப் பாடல்)

ஒரு மம்மட்டி மண்ணெடுத்து...
ஒண்றரைத் தோட்டம் கரும்பு வெட்டி ...

கரும்பே வா, கரும்பே வா,
கருங்கொளத்து மீனே வா!

வா! வா! மணிப்புறா,
வடக்கே தெற்கே போய்ப்பார்ப்போம்.

அங்கொரு செண்டுமல்லி
அடுக்கடுக்காய்ப் பூத்திருக்கு
தேசமெங்கும் படர்ந்திருக்கு
-------------
----------
தேவலோகம் போன கிளி ஆண்கிளியோ பெண்கிளியோ
ஆண்கிளியும் அல்ல மச்சான்
பெண்கிளியும் அல்ல மச்சான்
தானே வளரும் கிளி
தேவ லோகம் போன கிளி

கூறியவர்: மரு.கோகிலா - திருப்பூர் (கொங்கு மண்டலம்)

Sunday, August 15, 2010

சொலவடைகள் - tongue twisters

  1. ஓடுற நரியில ஒரு நரி கிழநரி, கிழநரி  முதுகுல ஒரு பிடி நரை மயிர்
  2. கொக்கு நெட்டைக் கொக்கு, நெட்டைக் கொக்கு இட்ட முட்ட கட்டை முட்டை
  3. பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே  பைத்தியங்களுக்கு  வைத்தியம்
    பார்க்கிற வைத்தியருக்கு  பைத்தியம்  பிடித்தா  எந்த
    பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்  பைத்தியங்களுக்கு வைத்தியம்
    பார்க்கிற வைத்தியர்  வந்து  அந்த  பைத்தியத்துக்கு  வைத்தியம் பார்ப்பார் ?
  4. சாலை வழியே சென்ற ஏழைக் கிழவி ஒருத்தி வாழைப்பழத் தோல் வழுக்கிக் கீழே விழுந்தாள்
  5. யாரு ‌தெச்ச சட்டை ? தாத்தா தெச்ச சட்டை.
  6. சைக்கிள் ரேலி போலொரு லாரி ரேலி (கன்னியாகுமரி மாவட்டம்)
  7. லாரி நிறைய ராலு மீனு (கன்னியாகுமரி மாவட்டம்)
     

ஆத்தங்கரை ஓரத்திலே ஆயிரந்தோப்பெந் தோப்பு

ஆத்தங்கரை ஓரத்திலே ஆயிரந்தோப்பு எந்தோப்பு !
சொல்லிக் கொடுத்தது சந்தணமா ?
சந்தணமென்ன நாறாதா ?
 நாறக்கும் கருவாடா ?
கருவாடென்ன காயாதா ?
 காயக்கும் தட்டானா ?
தட்டானென்ன கொட்டாதா ?
 கொட்டக்கும் கோயிலா ?
கோயில் என்ன கும்பிடாதா ?
 கும்பிடக்கும் ராசாவா?
ராசாவென்ன பேசாதா ?
 பேசக்கும் பல்லியா?
பல்லி என்ன பதுங்காதா ?
 பதுங்கக்கும் கள்ளனா ?
கள்ளன் என்ன ஓடாதா?
 ஓடக்கும் தண்ணியா ?
தண்ணி என்ன உடையாதா ?
 உடையக்கும் தேங்காயா ?
தேங்காய் என்ன தூங்காதா ?
 தூங்கக்கும் வௌவாலா ?
வௌவாலென்ன கவ்வாதா ?
 கவ்வக்கும் நாயா ?
நாயென்ன குலைக்காதா ?
 குலை கக்கும் வாழையா ?
வாழையென்ன  வழுக்காதா ?
 வழுக்கக்கும் பாம்பா?
பாம்பென்ன கொத்தாதா?
 கொத்தக்கும் கோழியா?
கோழி என்ன கூவாதா ?
 கூவக்கும் நரியா?
நரியென்ன ஊளம் போடாதா ?
......

கூறியவர்: நே.சபினா - செவிலியர்
கருங்கல், கன்னியாகுமரி மாவட்டம்

மனசிலாயா ?

கன்னியாகுமரி மாவட்டம் மலையாளமும்  தமிழுடன் கலந்து பேசப்படும் மாவட்டம். இம் மாவட்ட மக்களிடம் மலையாள வாய்மொழி வழக்குகள் இன்று வரை வழங்கி வருவதைக் காணலாம்.

சான்றாக ”மனசிலாயா ?” எனும் வழக்கின் மொழி பெயர்ப்பைக் கீழ்க்காணலாம்.

புரிஞ்சா புரிஞ்சதுன்னு சொல்லணும்
புரியலைன்னா புரியலைன்னு சொல்லணும்
புரியாததை புரிஞ்சதுன்னு சொன்னா(ல்)
புரிஞ்சதும் புரியாமல் போயிடும்.
என்ன, புரிஞ்சதா ?

கூறியவர்: நிஷா, செவிலியர்
இடைக்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்

கதை கதையாம் காரணமாம்......

கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் ஒரு ஊருணியாம்
ஊருணியில ஒருத்தன் மாடு குளிப்பாட்டப் போனானாம்
அந்த மாடு ஒரு கன்னு போட்டுச்சாம்
கன்னை விக்க கடைக்குப் போனானாம்
கடைக்காரன் ஒரு தேங்காயைக் கொடுத்தானாம்
தேங்காயைப் பிள்ளையாருக்குக் கொண்டு போனானாம்
தேங்காயை உடைக்கக் கல்லைத் தேடினால்
கல்லெல்லாம் தேனு
தேனெடுக்கச் சட்டியைத் தேடினா சட்டியெல்லாம் ஓட்டை
ஓட்டையை அடைக்க ‌ ஊசியைத் தேடினா ஊசியெல்லாம் வெள்ளி
வெள்ளியடி வெள்ளி
வெத்‌தலைக் காம்பைக் கிள்ளி
போட்டுக்கடி குள்ளி!


கூறியவர் : திருமதி. இராஜேஸ்வரி (எனது சித்தியார்)
குறவகுடி - மதுரை மாவட்டம் மற்றும் தி.சுப்புலாபுரம் - தேனி மாவட்டம்